வியட்னாம் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வியட்னாம் பிரதமர் குயுன் சான் புக்கிற்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க நேற்று ஜப்பான் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த வியட்னாமிய பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
நுகோயா ரோக்யூ விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் முதலீடுகளை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வியட்னாமிய தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, சிறிலங்காவுடன் விவசாயம், தொழில்நுட்பம், கைத்தொழில், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள தமது நாடு விரும்புவதாக வியட்னாம் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்துலக கப்பல் பாதைகளின் பாதுகாப்புக்காக சிறிலங்காவின் பங்களிப்பை வரவேற்ற வியட்னாம் பிரதமர், ஐ.நா பிரகடனத்துக்கு அமைய அனைத்துலக கப்பல் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்காவுடன் இணைந்து செயற்படுவதற்கும் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, வியட்னாமியப் பிரதமரை சிறிலங்காவுக்கு வருமாறு மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்னாமிய பிரதமர், கூடிய விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.