இரண்டு ரேடர் விமானங்களை சிறிலங்காவுக்கு வழங்குகிறது ஜப்பான் – உதவிப் பொருட்களும் வந்தன
சிறிலங்காவில் அனர்த்தகால மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இரண்டு ரேடர் விமானங்களை அன்பளிப்பாக வழங்குவற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ள மீட்புப் பணிகளுக்கு உதவும் நோக்கில், ஜப்பானிய, அனைத்துலக ஒத்துழைப்பு முகவரமைப்பு, இரண்டு டொப்லர் ரேடர் விமானங்களையும், நிலச்சரிவு நிலைமைகள் தொடர்பான செய்மதிப் படங்களையும், கொடையாக வழங்கி உதவ முன்வந்துள்ளது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களையும் விமானம் மூலம் ஜப்பான் அனுப்பி வைத்துள்ளது.
இன்றுகாலை, கட்டுநாயக்கவை வந்தடைந்த இந்த விமானத்தில், கம்பளிப் போர்வைகள், நீர்த்தாங்கிகள், நீர் சுத்திகரிப்பு கருவிகள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் அவசர உதவிப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.