கோத்தாவின் இராணுவப் பாதுகாப்பும் விலக்கப்படும்
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
‘அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவின் படி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பும் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படும்.
அதற்குப் பதிலாக சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்கள், அவருக்கு எந்த குறைவுமின்றி பாதுகாப்பை அளிப்பார்கள். கோத்தாபய ராஜபக்சவுக்கு தற்போது 50 இராணுவ கொமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கான இராணுவப் பாதுகாப்பையும் விலக்கிக் கொண்டுள்ளோம். அவருக்கும் சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்களே பாதுகாப்பு அளிக்கின்றனர்.
ஒரே தடவையில் அவரது இராணுவப் பாதுகாப்பு விலக்கப்படவில்லை. இரண்டு கட்டங்களாகவே அது நடைமுறைப்படுத்தப்பட்டது.
103 பேர் கொண்ட இராணுவப் பாதுகாப்பு அணியில் இருந்த 50 கொமாண்டோக்கள் ஏற்கனவே விலக்கப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள 53 இரராணுவ கொமாண்டோக்களும் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து விலக்கப்படுவர். இந்த நடைமுறைக்கு நேரம் தேவைப்படும்.
இதுபோன்று, கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக உள்ள 50 இராணுவ கொமாண்டோக்களும் ஒரே நேரத்தில் விலக்கிக் கொள்ளப்படமாட்டார்கள். மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக உள்ள இராணுவக் கொமாண்டோக்கள், விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், கட்டம் கட்டமாகவே கோத்தாபய ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு அணி விலக்கிக் கொள்ளப்படும்.
முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு அதிரடிப்படையை, சட்டம் ஒழுங்கு அமைச்சினால் அமைக்கப்பட்டுளள்ள நிபுணர்களை உள்ளடக்கிய குழுவே கையாளும்.” என்றும் அவர் தெரிவித்தார்.