சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – மைத்திரியின் கோரிக்கைக்கு மோடி சாதகமான பதில்
சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்தக் கோரிக்கைக்கு இந்தியப் பிரதமர் சாதகமான பதிலை அளித்துள்ளார்.
இதுபற்றி சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, திட்டத்தை முன்னெடுக்குமாறு தமது அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடந்த சந்திப்பின் போதே, சம்பூர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த விவகாரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுப்பிய போது, இந்தியப் பிரதமர் மோடி சாதகமாக அதனை அணுகினார்.
இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோனும். அவரது பிரதி அதிகாரியான லேனகலவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பிரிவின் பணிப்பாளர் அசோக கிரிஹகமவும் பங்கேற்றிருந்தனர்.
இந்தியத் தரப்பில், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறிலங்கா- மாலைதீவு விவகாரங்களுக்கான இணைச் செயலர் ரேணு பால், ஆகியோர் பங்கேற்றனர்.