அமெரிக்க நாடாளுமன்றக் குழு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும், சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கும் இடையிலான, ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் காத்திரமான அரசாட்சி, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல்,போன்ற நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள, சபை ஜனநாயக பங்காளர் என்ற அமைப்பைச் சேர்ந்த, காங்கிரஸ் உறுப்பினர்களே சிறிலங்கா வந்துள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தக் குழுவினர் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், தயாசிறி ஜெயசேகர மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.