திருகோணமலையில் தளம் அமைக்க அமெரிக்கா திட்டம் – திஸ்ஸ விதாரண
திருகோணமலையில் தளம் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இருப்பதாக எச்சரித்துள்ளார், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.
சோசலிச மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று உரையாற்றிய அவர்,
‘சிறிலங்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அதுல் கெசாப், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு இதுதொடர்பாக அனுப்பியிருந்த விரிவான அறிக்கை ஒன்றின் அடிப்படையில் தான், இந்த குற்றச்சாட்டை சுமத்துகிறேன்.
திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இராணுவத் தளங்களை உள்ளடக்கியதாக ஒரு அமெரிக்கத் தளத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக, அதுல் கெசாப் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாட்டவர்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு காணிகளை வழங்குவது போன்ற தவறான கொள்கைகள் அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டால், மீண்டும் சிறிலங்கா ஒரு காலனித்துவ நாடாக மாறும் ஆபத்து உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.