மகிந்த கால கொலைகளுடன் தொடர்புடைய கப்டன் திஸ்ஸ யாழ். இராணுவ முகாமில் தடுத்து வைப்பு
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இடம்பெற்றிருந்த, போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான கப்டன் திஸ்ஸ என்று அழைக்கப்படும், கப்டன் எல்.எம்.ரி.விமலசேன யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி ஒருவர் இதனை கொழும்பு ஆங்கில வாரஇதழிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, கப்டன் திஸ்ஸவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டு தடவைகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்தக் கொலையில், கப்டன் திஸ்ஸவுக்கு உள்ள தொடர்பு குறித்து, சிறிலங்கா இராணுவம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இராணுவ விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு, குற்றப்புலனாய்வின் தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.
கப்டன் திஸ்ஸ இன்னமும், யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தாஜுதீன் கொலை வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வரும் நிலையில், இராணுவமும் சமநேரத்தில் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று சிறிலங்கா காவல்துறையினால் வெளியிடப்பட்ட படங்களில் ஒன்று கப்டன் திஸ்ஸவின் முக அமைப்பை ஒத்ததாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்தக் கொலையுடனும் அவருக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.