பிரகீத் வழக்கில் புதிய திருப்பம் – அரச சாட்சிகளாக மாறிய முன்னாள் புலிகள் இரகசிய வாக்குமூலம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அரசதரப்பு சாட்சியாக மாறியுள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் அரசதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.
இவர்களை அரசதரப்பு சாட்சிகளாக பெயரிடுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, குச்சவெளியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு – கல்லடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு அரசதரப்பு சாட்சியாக பெயரிடப்படவுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று ஹோமகம நீதிவான் ரங்க திசநாயக்கவின் அறையில் இரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையிலேயே இவர்களை அரசதரப்பு சாட்சியாக மாற்றி, இந்த வழக்கில் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்சைக எடுக்கப்பட்டுள்ளது.