லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தம்
லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக, சிறிலங்கா கடற்படையின் விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
“லெப்.யோசித ராஜபக்சவின், கல்வித் தகைமைகள், மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக விசாரிக்க, சிறிலங்கா கடற்படையினால் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
யோசித ராஜபக்ச நிதிமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்தே, சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த அவருக்கு எதிரான விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
யோசித ராஜபக்ச 70 வெளிநாட்டுப் பயயணங்களை மேற்கொண்டுள்ளது முக்கியமானதொரு விவகாரம். அவற்றில் 20 பயணங்களுக்கு மாத்திரமே சிறிலங்கா கடற்படையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
அவர் அதிபர் செயலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த காலப்பகுதியி்லேயே இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் எனினும் அது பற்றிக் கருத்து தெரிவிக்கும் நிலையில் தாம் இல்லை என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர குறிப்பிட்டார்.