சிறிலங்காவுடன் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த சீன அதிபர் விருப்பம்
சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவாக்கப்படுவதை விரும்புவதாக சீன அதிபர், ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, சீன அதிபரைச் சந்தித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாவுக்கான தூதுவர் நியமனம் தொடர்பான ஆவணங்களை பீஜிங்கில் உள்ள கிரேட் ஹோலில் நடந்த நிகழ்வில், சீன அதிபரிடம், கருணாசேன கொடிதுவக்கு கையளித்திருந்தார்.
அதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், சிறிலங்கா தூதுவருக்குக்கும் இடையில் குறுகிய நேர கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இதன் போது, சிறிலங்காவுக்கான தனது பயணத்தை நினைவு கூர்ந்த சீன அதிபர், இருநாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் வரலாற்று ரீதியான உறவுகள் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் புதிய தூதுவரின் பதவிக்காலத்தில், சீன- சிறிலங்கா இருதரப்பு உறவுகள், மேலும் விரிவடையும் என்ற எதிர்பார்ப்பதாகவும், சீன அதிபர் குறிப்பிட்டுள்ளார்.