சென்னைக்கான விமான சேவையை இன்று மீண்டும் ஆரம்பிக்கிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்
சென்னைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
சென்னையில் கொட்டிய பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால், சென்னை விமான நிலையம் கடந்த 2ஆம் நாள் தொடக்கம் மூடப்பட்டது.
நேற்றுமுன்தினம் சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெற்று வரும் நிலையில், இன்று முற்றிலும் வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை- கொழும்பு இடையிலான விமான சேவைகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் இன்று மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
யுஎல்- 127 விமானம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு கொழும்பில் இருந்து சென்னைக்குச் செல்லும். அங்கிருந்து அந்த விமானம் மாலை 4.05 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை- கொழும்பு இடையே நாளாந்தம் நான்கு விமான சேவைகளை சிறிலங்கன் விமான சேவை நடத்தி வந்தது.
எனினும், இன்று ஒரு சேவை மட்டுமே இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.