சிறிலங்கா இல்லாத பட்டுப்பாதை திட்டம் வெற்றிபெறாது – சீன அதிகாரி
சிறிலங்கா இல்லாத சீனாவின் பட்டுப்பாதை திட்டம் வெற்றிகரமானதாக அமைய முடியாது என்று சீனாவின் யுனான் மாகாண அரசாங்கத்தின், வெளிவிவகாரப் பணியக தலைமை ஆலோசகர் ஜின் செங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா ஊடகவியலாளர்கள் குழுவொன்றிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“கிழக்கு மேற்கு சந்தைகளை இணைக்கும், பட்டுப் பாதையில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ள சிறிலங்கா, தனது கவசத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறிலங்கா இல்லாத சீனாவின் பட்டுப்பாதை திட்டம் வெற்றிகரமானதாக அமைய முடியாது
சிறிலங்காவின் அமைவிடத்தின் மீது நாங்கள் பொறாமை கொள்கிறோம்.
எமக்கு மூலோபாய இடத்தில் அமைந்த கடல் இல்லை. சிறிலங்கா தனது புவியியல் மூலோபாய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
யுனான் மாகாணம், தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான வாயிலாக இருக்கும் நிலையில், சிறிலங்காவுடன் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்த விரும்புகிறோம்.
யுனான் மாகாணத்துக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வர்த்தகம், கடந்த மூன்று ஆண்டுகளில், உறுதியாக அதிகரித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.