சோபித தேரரின் உடல் சற்றுமுன் தீயுடன் சங்கமம்
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரரின் உடல் ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் சற்று முன்னர் தீயுடன் சங்கமமானது.
கோட்டே சிறி நாகவிகாரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சோபித தேரரின் உடல் நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
இறுதி நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் பௌத்த பிக்குகள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,மற்றும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத தலைவர்களும், அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது உரையில், சோபித தேரர் விரும்பியது போல, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கவும், புதிய தேர்தல் முறையைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் இரங்கல் செய்தியை அமைச்சர் விஜேதாச ராஜபக்ச வாசித்தார்.
அஞ்சலிஉரைகளை அடுத்து பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு முப்படையினரும் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 6.15 மணியளவில் சோபித தேரரின் உடல் தீயுடன் சங்கமமானது. இதன் போது பௌத்த பிக்குகளும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதைக் காணமுடிந்தது.