கடற்படையிடம் ஒப்படைக்கப்படவில்லை – ராஜிதவின் அறிவிப்பை விஜேதாச நிராகரிப்பு
அவன் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவில்லை என்றும் அதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறே அதிகாரிகளை கேட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவன் கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பாக ஆராய நேற்று சிறிலங்கா அதிபர் தலைமையில் சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அவன் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் தாமும் பங்குபற்றியதாகவும் அவ்வாறான உத்தரவு எதையும், சிறிலங்கா அதிபர் பிறப்பிக்கவோ, முடிவு எதையும் எடுக்கவோ இல்லை என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவன் கார்ட் நிறுவனத்துடனான உடன்பாடுகளை முறித்துக் கொண்டு, அதன் செயற்பாடுகளை சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியங்களை ஆராயுமாறே சிறிலங்கா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் சிறிலங்கா அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளன.