தாய்லாந்தில் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கை சென்றடைந்தார்.
சிறிலங்கா- தாய்லாந்து இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சிறிலங்கா அதிபரை பாங்கொக் வருமாறு, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்- ஓ-சா, அழைத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று தாய்லாந்து சென்றுள்ள சிறிலங்கா அதிபருக்கு, பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்புடன் கூடிய அரச மரியாதை வழங்கப்பட்டது.
தாய்லாந்தின் உதவிப் பிரதமர் சோம்கிட் யதுசிறீபிடக், விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரை வரவேற்றார்.
சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அதிகாரிகளும் தாய்லாந்து சென்றுள்ளனர்.
அத்துடன் மகியங்கன ரஜமகா விகாரையில் இருந்து புத்தரின் புனிதப் பொருட்களை, சிறிலங்கா அதிபருடன் சென்றுள்ள, பௌத்த பிக்குகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தப் புனிதப் பொருட்கள் தாய்லாந்தில் பௌத்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்படவுள்ளது.
தாய்லாந்தில் தங்கியிருக்கும் போது, அந்த நாட்டின் இளவரசர், பிரதமர், ஆகியோருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்தவுள்ளார்.
இதன் போது, சிறிலங்காவின் அபிவிருத்திக்கு தாய்லாந்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் தாய்லாந்து வர்த்தக சமூகத்தினரையும், மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார்.