சிறிலங்காவில் சீன இராணுவ உயர்மட்டக் குழு
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா மற்றும் சீன இராணுவங்களுக்கிடையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், நல்லெண்ணப் பயணமாகவே சீன உயர்மட்டக்குழு சிறிலங்கா வந்துள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் செங்டு இராணுவப் பிரதேச தளபதியான, ஜெனரல் லி சுவோசெங் தலைமையில், ஆறு அதிகாரிகளைக் கொண்ட குழுவே சிறிலங்காவுக்கு வந்திருக்கிறது.
இந்தக் குழுவினர், இன்று காலை சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலகவைச் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களின் போது, இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள் வலுப்படுத்தல், பயிற்சிகளை அதிகரித்தல் குறித்துப் பேசப்பட்டுள்ளது.
ஜெனரல் லி சுவோசெங் தலைமையிலான சீன இராணுவ உயர் மட்டக் குழுவில், மேஜர் ஜெனரல் வாங் ஷெங்குவா, மேஜர் ஜெனரல் சாங் ஜியான்காங், மூத்த கேணல் டு ஜுன்லோங், லெப்.கேணல் லி டாவோ, லெப்.கேணல் பான் சியாவோபெங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்து நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர், சிறிலங்காவின் பல்வேறு படைத்தளங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.