மேலும்

தீர்மான வரைவின் சில பலவீனங்கள் முழுமையான தோல்வியை ஏற்படுத்தி விடும் – முதலமைச்சர்

cm-Wigneswaranஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் உள்ள சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்து விடும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புகூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மான வரைவின் உள்ளடக்கங்களை நான் முழுமனதுடன் வரவேற்கின்றேன்

இந்த தீர்மான வரைவு  உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும், நீண்டகாலமாக பிளவுபட்டுப் போயிருக்கும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நல்லதொரு ஆரம்பமாக அமையும்.

வடமாகாண முதலமைச்சர் என்பதால் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி என்ற ரீதியிலும், இந்தப் தீர்மான வரைவில் உள்ள சில பலவீனமான விடயங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்துவிடும் என்ற ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

பல பத்தாண்டுகளாக இடம்பெற்ற பிழையான வழிநடத்தல்கள் மற்றும் மீறப்பட்ட உறுதிமொழிகளால் ஏற்பட்ட பரந்த சந்தேகம் காணப்படும் நிலையில் உள்ளக விசாரணைப் பொறிமுறை தீர்வாக அமையாது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைக்கு அமைய சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக, கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டவாளர்கள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய சிறிலங்காவின் விசாரணைப் பொறிமுறை ஒன்றையே சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு வலியுறுத்துகிறது.

இதில் முதலாவது கவனிக்கப்பட வேண்டிய விடயம், எமது நாட்டில் அனைத்துலக சட்டங்களில் உள்ள விடயங்களைக் கொண்டு வருவதாயின் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இரண்டாவதாகக் கவனிக்க வேண்டிய விடயம், உள்ளூர் விசாரணையாளர்கள் மத்தியில் விசாரணைக்கான பொறுப்பு செல்லுமாயின் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது நீதியை வழங்காது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் தகுதியுடைய அனைத்துலக நீதிபதியொருவரை விசாரணைக்கு நியமித்தாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியொருவரும் விசாரணைகளில் கலந்து கொள்வார்.

மூன்றாவது விடயம், அனைத்துலக நீதிபதிகளின் தீர்மானங்கள் உள்ளூர் நீதிபதிகளால் தட்டிக்கழிக்கப்படுவது மற்றும் குறைத்து மதிப்பிடப்படலாம்.

விசாரணைப் பொறிமுறையானது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் வெல்வதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை வலியுறுத்துவதாக இருக்கக் கூடாது.

அவ்வாறான தொரு விசாரணைப் பொறிமுறையை குறித்த தீர்மான வரைவு முன்மொழியத் தவறியிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

தீர்மான வரைவில் உள்ள பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.

எனினும் தற்பொழுது இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னங்களைக் குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை குறித்த தீர்மான வரைவிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சிகள் அரசு மீதான நல்லெண்ணத்தை ஏற்படுத்த வில்லை.

இந்த தீர்மான வரைவானது ஒரு படி முன்னோக்கிச் செல்லும் செயற்பாடாக இருந்தாலும், கடுமையான கண்காணிப்பு மற்றும் அனைத்துலக சமூகத்தின் செயற்றிறன் மிக்க பங்களிப்பின் மூலமே சகல செயற்பாட்டையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்” என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *