அமெரிக்காவுக்கு சுமந்திரன் அவசர பயணம் – இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜெனிவா சென்றிருந்தார்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த தீர்மான வரைவுக்கு சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன், அதில் கலப்பு விசாரணைக்கு வலியுறுத்தும் பரிந்துரை உள்ளிட்ட 14 பந்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.
சிறிலங்காவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும், கருத்துக்களை வெளியிட்ட நிலையில், இரண்டாவது வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா இன்று வெளியிடவுள்ளது.
இந்த நிலையிலேயே, அவசரமாக அமெரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், தீர்மான வரைவு குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
குறிப்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இறுதி தீர்மான வரைவு அமைய வேண்டும் என்றும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வரைவு நீர்த்துப் போகச் செய்யப்படக் கூடாது என்றும், அமெரிக்க அதிகாரிகளிடம் சுமந்திரன் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.