போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை ஏற்க முடியாது – சிறிலங்கா அமைச்சர்
போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பது தான் எமது நிலைப்பாடு.
அனைத்துலக நிபுணர்களை அழைத்து வருவது தொடர்பாக எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
சிறிலங்காவில் தற்போது நீதித்துறை சுதந்திரமாக இயங்குகிறது. அரசுக்கு எதிராக பல தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதைப் பார்த்தாலே இது புரியும்.
போர்க்குற்றங்களை யார் செய்திருந்தாலும்- அது முன்னாள் அதிபர் மகழிந்த ராஜபக்ச, படைத்தளபதிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச என யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.
போரின் போது என்ன நடந்தது என்பது குறித்து முழுமையான தகவல்களைப் பெற, தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போல, எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய உண்மை அறியும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது,
நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டபோது, அனைத்துலக சமூகமும் தமிழ் சமூகமும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது அதனைச் செயல்படுத்த வேண்டுமென இருதரப்புமே கோரினார்கள்.
விசாரணை சரியான முறையில் நடைபெற்றால் தமிழ் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற முடியும்.
எந்தத் தாமதமுமின்றி விரைவிலேயே தேவையான ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.