மகிந்தவின் காலில் விழும் மைத்திரியின் ஆதரவாளர்கள்
மாத்தளையில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள நா-உலவில் நேற்று மாலை நடந்த கூட்டத்திலேயே, அண்மையில் பதவி விலகிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், கூட்ட மேடையில் மகிந்த ராஜபக்சவின் காலில் விழுந்து வணங்கினார்.
கூட்டத்தில் உரையாற்ற முற்பட்ட அவர், தொண்டை கட்டிப் போனதால், உரையாற்ற முடியாமல் சிரமப்பட்டார்.
சற்று நேரமே உரையாற்றிய அவர், தனது தந்தை, சகோதரர் ஆகியோருடன் அரசியலுக்கு வந்த மகிந்த ராஜபக்சவுக்கு வாயால் நன்றி கூறுவதை விட காலில் விழுந்து வணங்குவதே பொருத்தம் என்று கூறிக் கொண்டு அவரது காலில் விழுந்தார்.
அவர் காலில் விழப்போவதை அறிந்திருந்த போதிலும் தடுக்காமல் – ஆசனத்தில் அமர்ந்தபடி இரசித்துக் கொண்டிருந்தார் மகிந்த ராஜபக்ச.
மைத்திரிபால சிறிசேன அதிபரான பின்னர், மகிந்த ராஜபக்சவை விமர்சித்து, செய்தியாளர்கள் முன்பாக அழுது கண்ணீர் விட்டவர் ஜனக பண்டார தென்னக்கோன்.
அமைச்சர் பதவியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமையே விலகிய அவர், மீண்டும் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டிருக்கிறார்.
அத்துடன், மகிந்த ராஜபக்ச தொடர்பாக மைத்திரிபால சிறிசேன அண்மையில் நிகழ்த்திய உரையையும் அவர் காட்டமாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.