மேலும்

சிறிலங்காவின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளை மீண்டும் அம்பலப்படுத்துகிறார் யஸ்மின் சூகா

Yasmin Sookaதென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகாவின் தலைமையிலான சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பு, சிறிலங்காவில் இடம்பெற்ற சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்த அறிக்கை ஒன்றை இந்த வாரம் வெளியிடவுள்ளது.

”முடிவுறாத ஒரு போர்: சிறிலங்காவில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும்” (An Unfinished War: Torture and Sexual Violence in Sri Lanka)  என்ற தலைப்பில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

”இன்னமும் முடிவுறாத போர் சித்திரவதை மற்றும் வன்முறைகளில் இருந்து சிறிலங்காவில் தப்பியோர்- 2009 – 2015” என்ற தலைப்பில் ஏற்கனவே இந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகவே புதிய அறிக்கை அமையவுள்ளது.

இந்த அறிக்கை போருக்குப் பிந்திய 180 சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.

இவற்றில் 115 உயிர் தப்பியவர்களின் அல்லது சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 100 வாக்குமூலங்கள் வெள்ளை வான் கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் பெறப்பட்டதாகும்.

இவற்றில், எட்டு சித்திரவதை மற்றும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள், அண்மையில் – ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், இடம்பெற்றவையாகும். மேலும் 14 சம்பவங்கள் 2014ஆம் ஆண்டில் இடம்பெற்றவையாகும்.

இந்த அறிக்கையைத் தயாரித்துள்ள  சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்புக்குத் தலைமை தாங்கும், யஸ்மின் சூகா தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு மனித உரிமை சட்ட நிபுணராவார்.

இவர், 2010ஆம் ஆண்டில் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *