மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மிகநீண்ட வாக்குச்சீட்டு
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் இம்முறை மிக நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அச்சிடப்படவுள்ளது. அடுத்தமாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் தேர்தல்கள் திணைக்களம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளின் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு, ஒப்புநோக்கும் பணிகள் யாவும் முடிந்து அச்சிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன. ஏனைய நான்கு மாவட்ட வாக்குச்சீட்டுகளின் ஒப்புநோக்கும் பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது.
இவை முடிந்த பின்னர், நாளை பெரும்பாலும் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தமுறை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
16 அரசியல் கட்சிகளும், 30 சுயேச்சைக்குழுக்களுமான மொத்தம் 46 வேட்புமனுக்கள் போட்டிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதனால், 46 கட்சிகள் மற்றும் குழுக்களின் சின்னங்களை வரிசையாக அச்சிட்டு, அதன் கீழ் விருப்பு இலக்கங்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.
இதனால் இம்முறை மட்டக்களப்பு மாவட்ட வாக்குச்சீட்டு மிக நீளமானதாக இருக்கும் என்றும் தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.