மூன்று பிரதி அமைச்சர்கள் பதவி விலகினர் – மைத்திரி கருத்துக்கு எதிர் நடவடிக்கையாம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதி அமைச்சர்கள் இன்று தமது பதவிகளை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதிஅமைச்சர்களான சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன, எரிக் வீரவர்த்தன ஆகிய மூவருமே இன்று பதவி விலகியுள்ளனர்.
இவர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறி்சேன அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே தாம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தாம் தேர்தலில் நடுநிலையாக செயற்படப் போவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வி காணும் என்றும் தெரிவித்துள்ளதன் மூலம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்கு அவர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.