ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பிரகடனத்தில் கையெழுத்திட்டது சிறிலங்கா
சீனாவின் முன்முயற்சியால் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிப் பிரகடனத்தில் சிறிலங்கா இன்று கையெழுத்திட்டுள்ளது. பீஜிங்கில் நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கும் பிரகடன ஆவணத்தில், கையெழுத்திடும் இந்த நிகழ்வில், இதன் நிறுவக நாடுகளான 57 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா உள்ளிட்ட 50 நாடுகள் இந்தப் பிரகடனத்தில் இன்று கையெழுத்திட்டன. அவுஸ்ரேலியா முதல் நாடாக இந்த பிரகடன ஆவணத்தில் கையெழுத்திட்டது.
எஞ்சிய ஏழு நாடுகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் பிரகடனத்தில் கையெழுத்திடவுள்ளன.
மேற்குலக நாடுகளின் கையில் உள்ள உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றுக்கு போட்டியாக சீனா இந்த ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கியுள்ளது.
100 பில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்ட இந்த வங்கியின் தலைமையகம் பீஜிங்கில் அமைந்திருக்கும்.
இதன் மொத்த முதலீட்டில், 75 வீதம் வரை ஆசிய நாடுகளின் பங்களிப்பாகும். நாடுகளின் பொருளாதார அளவுக்கேற்ப இந்த வங்கியில் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சீனா 30.34 வீத பங்குகளையும், இந்தியா 8.52 வீத பங்குகளையும், ரஸ்யா 6.66 வீத பங்குகளையும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் கொண்டிருக்கும்.
இதன்படி சீனா 26.06 வீத வாக்குரிமையையும், இந்தியா, 7.5 வீத வாக்குரிமையையும், ரஸ்யா 5.92 வீத வாக்குரிமையையும் கொண்டிருக்கும்.
ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன். இதில் இணைய மறுத்து விட்டன.