நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகள் – தமிழரசுக் கட்சி மத்திய குழு திருமலையில் ஆலோசனை
அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலர் கே.துரைராஜசிங்கம்,
“ நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த நாடாளுமன்றத்துக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டன. நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.
தேசிய அளவில் தற்போது இருப்பதைப் போன்றதொரு தேசிய அரசாங்கம் அமைவதே தமிழர் தரப்புக்கு நன்மை பயக்கும் என்பதால், அத்தகையதொரு முடிவை தேர்தலில் உருவாக்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் உத்தியாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கு மாற்றாக, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” என்றும் அவர் கூறினார்.