சிறிலங்காவில் இன்று நடைமுறைக்கு வருகிறது 19வது திருத்தச்சட்டம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் இன்று தொடக்கம், நடைமுறைக்கு வரவுள்ளதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், “19வது திருத்தச்சட்டத்திலுள்ள நீதிச்சேவை ஆணைக்குழு தொடர்பான நான்கு சரத்துக்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின் அமைக்கப்படும் புதிய நாடாளுமன்றத்திலே நடைமுறைக்கு வரவுள்ளன.
நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், குறித்த சரத்துகள் நடைமுறைப்படுத்தப்படுவது தாமதிக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரும் நாள் குறித்தும் புதிய திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் இருவேறு நாட்களில் நடைமுறைக்கு வருவது தொடர்பாக, எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்த போதும் அவர்களின் திருத்தம் நிராகரிக்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்தார்.