சிகிரியாவில் கிறுக்கியதால் சிறை சென்ற மட்டக்களப்பு உதயசிறி இன்று காலை விடுதலை
பழமை வாய்ந்த சிகிரியா குன்றின் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, அதனைச் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சித்தாண்டியைச் சேர்ந்த, சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவரை, அவரது தாயா்ா மற்றும் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியில் கண்ணீருடன் காத்திருந்து வரவேற்றனர்.
முன்னைய செய்தி
சிகிரியா குன்றின் புராதன பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, அதனைச் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த, மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த, சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண் இன்று விடுவிக்கப்படவுள்ளார்.
தம்புள்ள நீதிமன்றத்தினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுர சிறைச்சாலையில், தண்டனையை அனுபவித்து வந்த, உதயசிறி, சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ், இன்று காலை 8 மணியளவில் விடுவிக்கப்படவுள்ளதாக அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான உத்தரவு, நீதி அமைச்சின் செயலரினால், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக, அனுராதபுர சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவரது தண்டனையை எதிர்த்து கண்டி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணிகள் நேற்று விலக்கிக் கொண்டதையடுத்தே, இன்று உதய சிறி விடுவிக்கப்படவுள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம், இவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டிருந்தார்.
எனினும், மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்தாலும், விடுதலை செய்ய முடியாது என்பதால், பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட பின்னரும் உதயசிறி 31 நாட்களாக சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டுள்ளது.
படங்கள்- லங்காதீப