சிறிலங்கா பயணத்தை கடைசி நேரத்தில் ஒத்திவைத்தார் இந்திய இராணுவத் தளபதி
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், சிறிலங்காவுக்கு இன்று மேற்கொள்ளவிருந்த பயணத்தைப் பிற்போட்டுள்ளதாக, இந்திய இராணுவத் தலைமையகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.
ஐந்து நாள் பயணமாக, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று பிற்பகல் சிறிலங்கா வரத் திட்டமிட்டிருந்தார்.
அவருடன், ஐந்து உயர் மட்ட அதிகாரிகளும், சிறிலங்கா வரவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இவர்கள், சிறிலங்காவின் உயர்மட்ட அரச தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவும், பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர்.
எனினும், நேபாளத்தில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து, அங்கு பேரழிவு மீட்பு பணிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
இதனால், இந்திய இராணுவத் தளபதியின் இன்றைய பயணம், நாள் குறிப்பிடப்படாது பிற்போடப்பட்டுள்ளதாக, இந்திய இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.