19வது திருத்தம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தை, முன்னர் திட்டமிட்டவாறு நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை என்று இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றுகாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 19வது திருத்தச்சட்டம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போதே, இந்த திருத்தச் சட்டமூலத்தை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை என்றும், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் விவாதம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களை மட்டும் உள்ளடக்கியதான, 19வது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதென்றும் இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.