மீண்டும் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை – இராஜதந்திர வெற்றி என்கிறது சிறிலங்கா
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நீடித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
”சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் காத்திரமற்ற இராஜதந்திர செயல்முறைகளின் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியிருந்தது.
ஆனால், புதிய அரசாங்கத்தின் இராஜதந்திர தலையீடுகளால், தற்போது சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியிருந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசியதன் விளைவாக, மீண்டும் விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய இராஜதந்திர வெற்றி.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.