பீஜிங் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர் – சீனத் தலைவர்களுடன் முக்கிய பேச்சு
சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று சீனத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, புறப்பட்டு சென்ற சிறிலங்கா அதிபர், நேற்று முன்னிரவில், சீனத் தலைநகர் பீஜிங்கைச் சென்றடைந்தார்.
பீஜிங் அனைத்துலக விமான நிலையத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ வரவேற்றார்.
வரும், 29ம் நாள் வரை பீஜிங்கில் தங்கியிருக்கும், சிறிலங்கா அதிபர், சீன அதிபர், பிரதமர் மற்றும் சீனாவின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதற்கிடையே, சீனாவின் நான்கு வெவ்வேறு மாகாணங்களில் இருந்து, நான்கு வர்த்தகக் குழுக்கள் சிறிலங்காவுக்கு வரவுள்ளன.
இன்று முதல் குழு கொழும்புக்கு வருகை தரவுள்ளது. வரும் 31ம் நாளுக்கிடையில், இந்த் நான்கு சீன உயர்மட்டக் குழுக்களும், சிறிலங்கா வந்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளது.