உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்காலம் 3 மாதங்களுக்கு நீடிப்பு
சிறிலங்காவின் 234 உள்ளூராட்சி சபைகளினது ஆயுள்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் 3 மாநகர சபைகள், 30 நகரசபைகள், 201 பிரதேச சபைகள் உள்ளிட்ட 234 உள்ளூராட்சி சபைகளின் ஆயுள்காலம் வரும், 31ம் நாளுடன் நிறைவடையவுள்ளது.
இந்தநிலையில், பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை ஒரு ஆண்டுக்கு சிறப்பு ஆணையாளரின் கீழ் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
எனினும், சிறப்பு ஆணையாளரின் கீழ் உள்ளூராட்சி சபைகளைக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சபைகளின் பதவிக்காலத்தை 3 மாதங்களுக்கு மட்டும் நீடிக்க மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஒரு மாநகர சபை 7 நகரசபைகள், 57 பிரதேச சபைகள் உள்ளிட்ட 65 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம், வரும் ஜூலை 31ம் நாளுடனும், 15 மாநகர சபைகள், 1 நகரசபை, 5 பிரதேச சபைகள் உள்ளிட்ட 21 உள்ளூராட்சிசபைகளின் பதவிக்காலம், வரும் ஒக்ரோபர் 16ம் நாளுடனும் முடிவடையவுள்ளது.
தேர்தல் முறை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பான செயல்முறைகள் நிறைவேற்றப்படும் வரையில், உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முடியாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.