மோடியின் கையசைப்புக்காக காத்திருக்கும் தலைமன்னார் தொடருந்து நிலையம்
சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைமன்னாருக்கான தொடருந்து சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு செல்லும் இந்தியப் பிரதமர், வரும் 14ம் நாள், தலைமன்னார் இறங்குதுறைக்கும் மடுவீதிச் சந்தி தொடருந்து நிலையத்துக்கும் இடையிலான தொடருந்துப் பாதையில் சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான 65 கி.மீ நீளம் கொண்ட இந்த தொடருந்துப் பாதையில், மதவாச்சி தொடக்கம், மடுவீதிச் சந்தி வரை ஏற்கனவே தொடருந்துச் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த தொடருந்துப் பாதை 120 கி.மீ வேகத்தில் தொடருந்துகள் பயணம் மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில், சேதமாக்கப்பட்ட 265 கி.மீ நீளமான தொடருந்துப் பாதையை புனரமைக்க இந்தியா 650 மில்லியன் டொலரை கடனாக வழங்கியிருந்தது.
இந்தியாவின் இர்கோன் நிறுவனம், மேற்கொண்டு வந்த இந்த புனரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.