சிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு ஊக்கமளிப்போம்- இந்திய வெளிவிவகாரச் செயலர்
சிறிலங்காவின் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
“நல்லிணக்க செயல்முறைகளை ஊக்குவிப்பது எமது உண்மையான பங்காகும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு சென்றிருந்த போது, வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்தனர்.
பல்வேறு அரசாங்க தலைவர்கள் வந்து இதுதொடர்பாக கலந்துரையாடினர். நாம் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமளிப்போம்.
இப்போது 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மையப்படுத்தியதாகவே எல்லாம் உள்ளது.
அதேவேளை, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இருநாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஒரு இலட்சம் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த அகதிகளை எவ்வாறு கௌரவமாக, மதிப்பாக, பாதுகாப்பாக, திருப்பி அனுப்ப முடியும் என்பது குறித்த வழிகளைக் கண்டறிவதென, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லி வந்திருந்த போது இணக்கப்பாடு காணப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஜனவரி 30ம் நாள் நாம் ஒரு இருதரப்பு கூட்டத்தை நடத்தியுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.