ஜெனிவாவுக்கான புதிய இந்தியப் பிரதிநிதியாக அஜித் குமார் நியமனம்
ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், தூதுவராகவும், அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது, அமெரிக்காவின் அட்லான்டா நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூல் ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார்.
இவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெனிவாவுக்கான தூதுவர் பதவியை விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
முன்னர், ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியாக இருந்த திலிப் சின்ஹா, சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்வதில் முக்கிய பங்காற்றியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அவர் கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்ற நிலையில், ஜெனிவாவுக்கான புதிய தூதுவராக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
சையத் அக்பருதீனே முன்னர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவிருந்த போதிலும், அந்த முடிவு மாற்றப்பட்டு, அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.