பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ் கொழும்பில் தடுத்து வைப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை சிறிலங்காவில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தி ஹிந்து நாளிதழ் குழுமத்தினால் வெளியிடப்படும், புரொன்ட்லைன் சஞ்சிகையில், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வி ஒன்று வெளியாகியிருந்தது.
அந்தச் செவ்வியை தற்போது புரொன்ட்லைன் மறுபிரசுரம் செய்துள்ளது.
புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியுடன் வெளியாகியுள்ள புரொன்ட்லைன் சஞ்சிகையை, இலங்கையில் விற்பனைக்காக விடுவிக்க சிறிலங்கா சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதன் பிரதிகளை அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி அனுமதி கோரியிருந்தனர்.
ஆனால், பாதுகாப்பு அமைச்சு எந்தக் கருத்தையும் கூறாமல், ஊடக அமைச்சையே தீர்மானிக்கும் படி அனுப்பி விட்டதாக, ஊடக அமைச்சின் செயலர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
தற்போது தாம் இந்த இதழில் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் உள்ளடங்கியுள்ளதா என்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரொன்ட்லைன் இதழைத் தடைசெய்வது குறித்த எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.