கிழக்கு மாகாணசபையில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றியது – கூட்டமைப்புக்கு 2 அமைச்சர் பதவிகள்?
கிழக்கு மாகாணசபையில் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று 34 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஹபீஸ் நசீர் முகமட் சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக, சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 34 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட மாகாணசபையில், சபை முதல்வர் வாக்களிக்கவில்லை. அதேவேளை, இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய இந்த வரவுசெலவுத் திட்டம், ஆட்சிமாற்ற இழுபறிகளால் சுமார் இரண்டு மாத ம் கழித்து இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிழக்கு மாகாணசபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன், தன்னிச்சையாக முதலமைச்சரை நியமித்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய, கிழக்கு மாகாணசபையின் இரண்டு அமைச்சர் பதவிகளையும், பிரதி அவைத்தலைவர் பதவியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முஸ்லிமை காங்கிரஸ் இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதியான- அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.