சிறிலங்கா மீதான அழுத்தங்கள் தொடரும் – கூட்டமைப்புக்கு அமெரிக்கா உறுதிமொழி
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக,
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவில் எப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புகள், புதிய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எப்படியான நிவாரணம் கிடைக்க முடியும் என்பது உட்பட பல விடயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது என நிஷா பிஸ்வால் குறிப்பிட்டார்.
மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுவது, நீண்டகாலமாக சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது ஆகியன தொடர்பாக புதிய அரசாங்கத்துடன் தான் நடத்திய பேச்சுகள் குறித்தும் அவர் எமக்கு விளக்கினார்.
சிறிலங்காவில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்ச்சியாக முழுமையாக இருக்கும் என்றும், குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று எட்டப்படுவதற்கு அமெரிக்க அரசு முழுமூச்சுடன் செயற்படும் என்றும் நிஷா பிஸ்வால் எமக்கு உறுதியளித்தார்.
அந்த வகையில் சிறிலங்காவுக்கு தொடர்ந்து உதவியை அளிப்பதுடன் அதன் மீதான அழுத்தமும், தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்” என்றும் அவர் கூறினார்.