இன்று சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் – படைபலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் இல்லை
சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வு இன்று கோட்டே சிறி ஜெயவர்த்தனபுர நாடாளுமன்றக் கட்டட மைதானத்தில் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார்.
இந்த நிகழ்வில் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனினும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.
முன்னதாக இந்த நிகழ்வு மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான வீரகெட்டியவில் பிரமாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
ஆனால் புதிய அரசாங்கம் இந்த நிகழ்வை கொழும்புக்கு மாற்றியுள்ளதுடன், ஆடம்பரமற்ற வகையில், எளிமையாக நடத்தவும் ஒழுங்கு செய்துள்ளது.
இன்றைய நிகழ்வில், முப்படையினர் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய 5500 படையினரின் அணிவகுப்பு இடம்பெறும்.
அதேவேளை, முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்றது போல சிறிலங்கா விமானப்படையின் விமான சாகச அணிவகுப்பு இடம்பெறாது.
அத்துடன், போர்த்தளபாடங்கள் தாங்கிய இராணுவ வாகனங்களின் அணிவகுப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
அணிவகுப்புக் கட்டளை அதிகாரிகளை தாங்கிய இரண்டு இராணுவ வாகனங்கள் மட்டுமே இன்றைய அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,