சிறிலங்காவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைக்கு கொமன்வெல்த் வரவேற்பு
விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை கொமன்வெல்த் அமைப்பு வரவேற்றுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா, தனது பயணத்தின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்த பின்னர், கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டது குறித்த நீதித்துறை விசாரணையை ஆரம்பிப்பதற்கு, சிறிலங்காவுக்கு கொமன்வெல்த் அமைப்பு உதவிகளை வழங்கும்.
இந்த முக்கியமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு கொமன்வெல்த்தின் ஆதரவை வழங்குவது குறித்து கலந்துரையாடியுள்ளோம்.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் திட்டத்தை வரவேற்கிறோம்.
போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர கொழும்பு எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சியளிக்கிறது.
சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.