நம்பகமான பொறிமுறை உருவாக்காவிடின் அனைத்துலக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் – மங்கள சமரவீர
சிறிலங்காவில் வலுவானதொரு நீதித்துறைப் பொறிமுறையை உருவாக்குவது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்காப் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை தவிர்க்க உதவும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீன செய்தி நிறுவனத்துக்கு செவ்வி அளித்துள்ள மங்கள சமரவீர,
“சிறிலங்காவின் நீதித்துறை, திறன்வாய்ந்தது, சுதந்திரமானது, பாரபட்சமற்றது என்பதை உலகத்துக்கு அரசாங்கம் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அனைத்துலக விசாரணை இப்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நீதித்துறையின் நம்பகத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இந்த விசாரணைகளின் விளைவாக, சிறிலங்கா ஆயுதப்படையினரும், சிவிலியன்களும், அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்பாக நிறுத்தப்படும் நிலை ஏற்படக் கூடும்.
முன்னைய அரசாங்கம் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையை உருவாக்கத் தவறியன் விளைவாகவே, தற்போதைய நெருக்கடி தோன்றியுள்ளது.
பொருளாதாரத் தடையை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதும், நாட்டின் புகழைப் பாதுகாப்பதும் சவாலான காரியம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.