ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்கும் – பிரதமர் ரணில் தெரிவிப்பு
போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா நடத்தும் விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.
மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலகட்டத்தில், சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக சீனாவையும், சீனாவுக்கு எதிராக இந்தியாவையும், பயன்படுத்தி ஒருவருக்கு எதிராக மற்றவரை பயன்படுத்தி விளையாட முயன்றார்.
ஆனால் அதுவே அவருக்குத் தடையாக வந்திருக்கிறது.
அவரது காலத்தில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கான உடன்பாடுகளை மீளாய்வு செய்ய உள்ளோம்.
புதிய அரசாங்கம் அண்டை நாடுகளுடன் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்.
எல்லா வெளிநாட்டு, உள்நாட்டுத் தொடர்புகளிலும், ஊழலற்ற தன்மையை உறுதிப்படுத்துவோம்.
சீனர்களினதோ அல்லது வேறு எந்த நாட்டினதோ திட்டங்களில் ஊழல்கள் இடம்பெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்தும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும்.
கொள்கை ரீதியாக, தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.