மேலும்

வடக்கு ஆளுனர் மாற்றத்தை சம்பந்தன் வரவேற்பு – கிழக்கிலும் நடக்கும் என நம்பிக்கை

sampanthan-rவடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுனருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பாலிஹக்காரவை நியமிக்க புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

“மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆளுனரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது.

புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுக்களின் போது ஆளுனர் மாற்றம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

வெளியுறவுச் சேவையிலும் ஐ.நாவின் பணிகளிலும் நீண்டகால அனுபவம் கொண்டவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினருமான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதை நாம் வரவேற்கிறோம்.

அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படும்படி நாம் கோரவில்லை. சட்டரீதியாக, வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பார் என்று நம்புகிறோம்.

வடக்கைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுனர் மாற்றத்தை எமது கட்சி கோரியிருக்கிறது. அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புகிறோம்.

அதிபர் தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

அதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *