அடுத்தமாதம் புதுடெல்லி செல்கிறார் மைத்திரி
சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, அடுத்தமாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அவர் தனது முதலாவது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை புதுடெல்லிக்கு மேற்கொள்ளவிருக்கிறார்.
அடுத்த மாதம் மைத்திரிபால சிறிசேன இந்தியா செல்வார் என்று, அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சிறிலங்காவில காவலில் வைக்கப்பட்டுள்ள 15 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும்.
ஏனென்றால்,இந்தியாவின் முக்கியத்துவத்தை புதிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி, சிறிலங்கா அதிபரை இந்தியாவுக்கு அழைத்துள்ளார்.
இந்த மாதம் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி செல்வது கடினம். அடுத்தமாதம் அவர் அங்கு செல்வார்” என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.