மகிந்தவின் திட்டத்தை சிறிலங்கா இராணுவமே தோற்கடித்தது
கொழும்பு நகரில் சிறிலங்கா இராணுவத்தை நிலைநிறுத்த இறுதி நேரத்தில் மகிந்த ராஜபக்ச முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால், அவரது உத்தரவுக்கு இராணுவத் தளபதி இணங்க மறுத்து விட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“கொழும்பில், இராணுவத்தினரை நிறுத்த வழங்கப்பட்ட உத்தரவை ஏற்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க மறுத்து விட்டார்.
அவசரகாலச்சட்டத்தின் மூலம், அதிகாரத்தை தக்கவைக்கும் திட்டத்தை முன்னைய அரசாங்கம் கொண்டிருந்தது.
கடைசி நேரத்தில், உயர்மட்டத்தில், இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்க மறுத்ததன் மூலம், அரசாங்க அதிகாரிகள் அந்த திட்டத்தை தோற்கடித்து விட்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேர்தலுக்குப் பின்னர், வடக்கில் இராணுவ முகாம்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், வடக்கில் எங்கும் புலிக்கொடிகள் ஏதும் பறக்கவில்லை.
இராணுவ முகாம்களின் மீது கற்களும் வீசப்படவில்லை. யாழ். பல்கலைக்கழகத்தில் வன்முறைகளும் இடம்பெறவில்லை.அவற்றான செய்திகள் அனைத்தும் பொய்யானவை.” என்றும் தெரிவித்துள்ளார்.