மகிந்தவின் மற்றொரு அமைச்சரும் மைத்திரிக்கு ஆதரவு
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்த நந்திமித்ர எக்கநாயக்கவும், இன்று எதிரணிக்குத் தாவியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் இல்லத்தில் இன்று பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவர் இதனை அறிவித்துள்ளார்.
தாம் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக, குறிப்பிட்ட அவர், நாட்டில் தற்போது மாற்றம் ஒன்று அவசியம் என்றும் கூறினார்.
அந்த மாற்றத்தின் ஒரு பங்காளியாகத் தாமும் இருக்க விரும்புவதாகவும் பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனது பதவி விலகல் கடிதத்தை நந்திமித்ர எக்கநாயக்க, சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகியுள்ள 26வது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.