மேலும்

மர்மப் பயணம் மேற்கொள்ளும் சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு தடைவிதித்தது சிறிலங்கா

chinese-boatsசிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முதலீட்டுச்சபையின் அங்கீகாரத்துடன், சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் 10 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள், சிறிலங்கா துறைமுகத்தில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்தன.

இந்தக் கப்பல்களின் மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 10 வீதத்தை, சிறிலங்கா கடற்றொழில் அமைச்சுக்கு வழங்க வேண்டும் என்றும், சிறிலங்கா துறைமுகம் வழியாகவே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த்து.

எனினும், சீன மீன்பிடிக் கப்பல்கள், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றாலும், வெறும் கையுடன் திரும்புவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இதனால், ஆழ்கடலில் வைத்தே மீன்களை வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்தும், உடன்பாட்டை மீறி சிறிலங்கா கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவதாக உள்ளூர் மீனவர்கள் சுமத்திய குற்றச்சாட்டைத் தொடர்ந்தும், சிறிலங்கா கொடியுடன் சீன மீன்பிடிக் கப்பல்கள், இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிப்பதற்கு இந்தியத் தரப்பில் வெளியிடப்பட்ட அதிருப்தியைத் தொடர்ந்துமே, இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், அதுவரையில், சிறிலங்கா கொடியுடன், வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *