வடக்கில் தனக்கு 35 வீத வாக்குகள் கிடைக்குமாம் – மகிந்தவின் நம்பிக்கை
வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், தனது இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 20 வீத வாக்குகளைக் கூட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் பெற முடியவில்லையே என்று, எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தாம் இம்முறை வடக்கில் 30 தொடக்கம் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என்று தனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிர்வாகம் நடத்த முடியாது என்பதை, மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே தாம் அங்கு தேர்தலை நடத்தியதாகவும் சிறிலங்கா அதிபர் தெரிவித்திருக்கிறார்.