சீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து இந்தியாவுக்குத் தெரியுமாம் – மகிந்த கூறுகிறார்
சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்து நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிப்பரப்பான செவ்வியிலேயே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் (சீன நீர்மூழ்கிகள்) இந்தப் பக்கம் வரும் போதெல்லாம், அவர்கள் எப்போதும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தகவல் கொடுக்கிறார்கள்.
மத்திய கிழக்கை நோக்கிச் செல்கிறோம் என்றும், இங்கே வருகிறோம் என்றும், அவர்களே, தகவல் தெரிவிக்கிறார்கள்.
சீன அதிபரின் பயணத்துக்கு நெருக்கமாக, நாட்டைச் சுற்றி நாம் ஏழு போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்திருந்தோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சீன நீர்மூழ்கிகள், கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பது குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டதான தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச,
“இந்திய அதிகாரிகள், நீர்மூழ்கிகளின் நடமாட்டம் குறித்த தகவலை பரிமாற வேண்டும் என்று மட்டுமே கோரினார்கள்.
எந்த நாடும், எந்த நேரத்திலும் தண்ணீர் மற்றும் எரிபொருள் தேவையென்றால், திறந்து விடும் படி, நான் அதிகாரிகளுக்கு கூறியுள்ளேன்.
போர்க்கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு வருவது இது தான் முதல் முறை அல்ல.
இந்தியா எமது உறவினர். சீனா எமது நண்பன்.
எமது நண்பர்களுக்கு எதிராகவோ, அயலவர்களுக்கு எதிராகவோ, எமது மண்ணைப் பயன்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்.
நான் இருக்கும் வரையில், சிறிலங்காவில் அது நடக்காது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமுகமான உளவு உள்ளது.பல தடவைகள் நாம் பேசியுள்ளோம்.
எமது நாடுகள் தொடர்பாக நாம் ஒரே விதமான நிலைப்பாட்டில் இருக்கிறோம் என் நான் நினைக்கிறேன்.
பல பகுதிகளில் எமது உறவுகள் தொடரும் என்று நம்புகிறேன்.” எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.