புதிய போர்க்குற்ற விசாரணை – வாக்குறுதி அளிக்கிறார் மகிந்த
எதிரணியின் கடுமையான போட்டிக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த பதவிக்காலத்தில் புதிய போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின், ‘மகிந்த சிந்தனை – உலகை வெல்லும் வழி’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையிலேயே அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
“2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போர் குறித்து, ஐ.நா நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.
ஆனால், போரின்போது மனித உரிமைகள் ஏதாவது மீறப்பட்டிருந்தால், வெளிப்படையான உள்நாட்டு நீதிப்பொறிமுறையின் ஊடாக, நீதி நிலைநாட்டப்படும்.” என்று மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், கடந்த ஜுலை மாதம் சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்பட்ட விசாரணையில் இருந்து இது எந்தவகையில் வேறுபடுகிறது என்பது குறித்து, அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.